கார்த்திகை சுவாமிகளோடு சந்திப்பு
கார்த்திகை சுவாமிகளோடு சந்திப்பு
“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்பதற்கேற்பவும் “ஙகரம் போல்வார் புகரில் குரவர்” எனும் ஞான வாக்கியத்திற்கேற்பவும் சுவாமிகள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருவுத்தர கோசமங் கையில் கார்த்திகைச் சுவாமிகள் எனும் முருக பக்தர் இருக்கிறார் என்பதை அறிந்த சுவாமிகள் அவரைக் காண அவ்வூர் சென்ற பொழுது அவர் மதுரை போந்தனர் என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் இல்லம் திருப்பினார். பின்னர் சில நாள் கழித்து நாகப்பட்டினம் கடற்கரையில் சுவாமிகள் உலாவிக் கொண்டிருந்த பொழுது காஷாயமணிந்த துறவியொருவர் வரக் கண்டு அவர் “கார்த்திகை சுவாமிகள் தானா” என்று இவர் ஐயப்பட்டு நோக்கியவுடன் அவர் இவரை நோக்கி “தாங்கள் யார்?” என இவர் “பாம்பன் சுவாமிகள்” என அவர் தன்னைக் கார்த்திகை சுவாமிகள் என அறிமுகப்படுத்திக் கொள்ள இருவரும் கழிபேருவகையுற்று கட்டித்தழுவி “நினைத்தது நடந்தது நிமலன் அருளால்” என உள்ளங்குளிர்ந்து உரையாடி நின்றனர். சுவாமிகள் முருகனருள் பெற்ற கார்த்திகை சுவாமிகளின் வரலாற்றைப் “பெருவேண்டுகோள்” எனும் பதிகத்தில் பதிவு செய்தார்கள்.
திங்கட் சடையின் மங்களைத் திகழும் சிவகோச
மங்கைக் குமரேசர் தொழுதான் வைகிடனெய்தி
அங்கைக் கிடுவால் வல்சிய யின்றோதி மறைந்த
மங்குற் பகைமணியே எனை மறவேல் எனை மறவேல்.