சைவ சமய சரபம் ஆனார்
சைவ சமய சரபம் ஆனார்
வாயீர்வாள் என வெளியிட்ட நூலுக்கு மறுப்பாக சுவாமிகள் “சைவசமயசரபம்” என்ற நூலை 95 அத்தியாயங்களாக இயற்றிட, அதனைத் திருவனந்தபுரம் N.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தன் பதிப்புரையுடன் 1908 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூலுக்கு முன்னதாகவே சுவாமிகள் மாலிய மறுப்பாக நாலாயிரப் பிரபந்த விசாரம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சுவாமிகள் இந்நூலில் சிவ பரத்துவம் நிறுவ அநேக ஸ்மிருதி புராணேதிகாச பிராமாணர்களைக் காட்டியிருப்பîதாடு பத்து ஆங்கில நூல்களையும் காட்டியிருப்பது அவரது பரந்து விரிந்த அறிவுக் கூர்மையை நமக்குக் காட்டுகிறது அன்றோ!
சுவாமிகள் மேற்கோள் காட்டும் ஆங்கில ஏடுகளாவன:
1. இண்டியன் ரிவியூ பத்திரிகை, 2. இந்து பத்திரிக்கை, 3. லிபரெல் பத்திரிக்கை, 4. தென்னார்க்காடு கெசட்டியர், 5. இந்தியாவின் இராஜாங்கச் கெசட்டியர், 6. மதச்சீர்திருத்தம், 7. பூர்வீக இந்தியா – ரோமேஷ் சந்தர்தத், 8. இராசஸ்தானம் – கர்ணல் ஜேம்ஸ்டாட், 9. பாரதமுகவுரை – எஃப் மாக்ஸ் முல்லர், 10. சுவாமிவிவேகானந்தர் – புத்தக முகவுரை
சுவாமிகள் இந்நூலில் எடுத்தாண்ட தமிழேடுகளாவன:
1. விவேகபானு, 2.பிரம்ம வித்யா, 3. செந்தமிழ் (மதுரை), 4. உபந்நியாசமெனும் துண்டுப்பத்திரிக்கை.
இந்நூல் முன்னுரையில் சுவாமிகளின் முழக்கம்:
வைணவம் இழிகுலத்தவரானுங் காமோற்சவப்பிரியர்களாலும் இனிது கொண்டாடப்படுவதாமென்பதையும், வைணவருள் இழிகுலத்தினர் உயர் குலத்தின ரெனவுளர் என்பதையும் சைவம் மாறா நீர்த்தென்பதையும், இராம இராச்சியம் சைவமாகவே இருந்ததென்பதையும் இந்நூலின் ஈற்றில் சேர்க்கப்பட்ட ரோமேஷ் சந்தர் தத் என்பாரது பூர்வீக இந்தியா எனும் புத்தகமும் லிபரலெனும் பத்திரிகையும், இந்தியாவின் இராசங்கத்துச் கெசட்டியரும் கர்ணல் ஜேம்ஸ்டாட் என்பாரது இராசஸ்தானம் எனும் புத்தகமும் தீர்மான வாயிலாகவும் அபிப்ராய வாயிலாகவும் விளக்குதலானே உயர் குலத்தவரும் உயர்நெறிவிருப்பரும் வைணவத்திற் புகாதிருக்குங் கடன்மையரேயாவர் பிற ஆங்கிலமொழி வாயிலாகவும் சைவத்தின் மேம்பாடு உணரக் கிடக்கின்றது. இந்நூல் 20ம் அத்தியாயம் சிவனையும் விண்டுவையும் சமப்படுத்துதலைக் கண்டித்து அத்தகையாருக்கு நரகமே கிட்டுமென எச்சரிக்கை விடுக்கிறது. சுவாமிகள் இயமானனையும், வேலைக்காரனையும் எப்படிச் சமமாக நினைக்க முடியும் என்று வினாவுகிறார். சுவாமிகள் “அரியுஞ்சிவனுமொன்று” எனும் பழமொழியை மறுத்து “அறியுஞ்சிவனுமொன்று” என்று புதுமொழி பகர்தல் இந்நூலில் உள்ள புதுமைகளில் ஒன்று. அதனைப்புரிந்து கொள்ளல் நன்று.