துறவு நசையும் தூயோன் வசையும்
துறவு நசையும் தூயோன் வசையும்
சுவாமிகள் துறவு விழைந்து இருக்குங்கால் நண்பர் அங்கமுத்துப்பிள்ளை அவன் வரத் தன் எண்ணத்தை மறைத்து “நாளை நான் பழநிபதி செல்லவுள்ளேன்” எனக் கூறியதும் நண்பர் “மீண்டெப்போது வருவீர்கள்?” என சுவாமிகள் “சொல்ல இயலாது” என்றார். உடனே நண்பர் தடுத்து “இது குமரக் கடவுள் கட்டளையோ? என வினவச் சுவாமிகள் துறவு வேட்ககையால் “ஆம்” எனத் தலையசைத்தார். அடுத்தகணம் சுவாமிகள் விண்ணை நோக்க அங்கே முருகப் பெருமான் முகத்தில் வினைக்குறி தோன்ற “எனது கட்டளை என்று பொய் புகன்றனை, அதனால் நான் கட்டளையிடும் வரை பழநிப் பதிக்கு நீ வரலாகாது” எனப் பல்லைக் கடித்து சுட்டு விரலை நீட்டிச் சீறும் காட்சியைக் கண்டார். கண்ணீர் பெருக சுவாமிகள் உள்ளத்தில் “என்னப்பனே ஆன்மலாபம் கருதி அடியேன் செய்த இச்சிறு தவறை மன்னிக்கலாகாதா” என வேண்ட செவ்வேட் பரமன் “அந்த லாபம் என்னாலாகாதா?” என்று திருவாய் மலர்ந்ததையும் சுவாமிகள் கேட்டு “அப்படியே ஆகட்டும்” என அக்காட்சி மறைந்தது.
சுவாமிகள் வரலாற்றில் இந்நிகழ்ச்சி உணர்த்தும் உண்மைகள் பல இறைவன் ஒருவன் உளன் என்பதும் எங்கும் இருந்து எல்லாவற்றையும் அறிவாள் என்பதையும் ஆன்மலாபம் அவனருளாற் பெற வேண்டுமே ஒழிய நாம் வலிந்து முயலல் தவறு என்பதும் எந்நிலையிலும் பொய்யுரைத்தல் பாவம் என்பதும் உணர்த்தப்படுகின்றன. சுவாமிகள் இந்நிகழ்ச்சியைத் தம் பாடல்களில் எல்லாம் பதிவு செய்திருக்கின்றார்கள். சுவாமிகள் முதல் மண்டலமாகிய குமரகுருதாச சுவாமிகள் பாடலில் 57 ஆக வருவது “திருவுயர்ந்த வாறெழுத்தன்னுவல்” ஈற்றுப்பாடல்
செந்தமிழைச் செவிமடுத்து மகிழுந் தேவைத்
திறலிடும்பன் உயிர்முருக்கி எழுப்புந் தேவைப்
புந்தி நிறைவுடையரு ணகிரி சூழ் தேவைப்
புகரிகந்த கரவருடங் கடகமாதம்
வந்தவொரு புகரிரவிற் பழநிக் கோவில்
வரஇஞ்ஞான் றருளவில்லை யருள்வே மந்நாள்
பந்தமற வருதியெனப் பணித்துப் போந்த
பண்ணவனைப் படர்பவரெம் பரமர் தாமே.
என வருதல் காண்க. முருகன் இசைவு இறுதிவரை கிட்டாத கரணியத்தால் சுவாமிகள் பழநி செல்லவில்லை.