சுவாமிகள் வாழ்வில் பல கனவுகள் தோன்றிக் குறிப்பு உணர்த்துகின்றன.இறையருள் பெற்றோர்க்குத் îதான்றும் கனவுகள் பலிக்கும். அஃதில்லார் கானும் கனவுகள் வெறும் கானல் நீராய் மறையும்,
சுவாமிகள் வாழ்வில் கண்ட கனவுகள்:
கனவு1. அழகிய திருமேனிச் சைவர் ஒருவர் தோன்றி இவரை அழைத்துச் சென்று வாழையிலை போட்டு அன்னமும் பாலும் கலந்தளித்து "இதை நீ உண்பாயாக" எனக் கட்டளையிட இவரும் உண்டு மகிழ்ந்தார். அதன்பின் கவிபாடும் ஆற்றல் தன்னுள் மிகுந்ததை உணர்ந்தார்.
கனவு 2. சுவர்க்க நரகக் கனவு: பாம்பன் பதியில் வாழுங்கால். ஓர் நாள் கனவில் ஒரு பாதை வழியே செல்ல அப்பாதை பிரிந்து வேறோர் பாதை தோன்ற இவர் அவ்வழியே சென்றார். கற்றாழையும் கள்ளியும் நிறைந்த காட்டை கண்டார். கருநிறத்தவர்களாய் கரித்துணிகளை அணிந்திருந்த சிலர் தன் மீது கல்லையும் மணலையும் வீசி எறிவதையும் ஏசுவதையும் கண்டார். பலத்த தேகிகள் மூவர் இவரை அணுகி "எம்முடன் வருக" என அழைத்து தென்திசை நோக்கி நடந்தனர். மூவருள் இருவர் இவர் இரு கரங்களையும் நன்கு பற்றிக் கொண்டனர். எதிரே தூய வெண் மணற் பூமி காணப்பட்டது அங்கே நறுமனம் வீசக் கனிமரங்கள் பல நிறத்தவாய்க் கண்டார். அங்குள்ள மாந்தர் அக்கனிகளை உண்ட வண்ணம், ஒருவரோடொருவர் அளவிளாவி மகிழ்கின்ற காட்சியையும் கண்டார். சுவர்க்க நரகங்கள் உண்டென்பதையும் அது குறித்து விசாரம் கொள்ளா வேண்டாமென்பதையும் உணர்த்திட இக்கனவு தோன்றியதாகச் சுவாமிகள் அறிந்து மகிழ்ந்தார். பாம்பன் சுவாமிகள் கனவில் வந்து அடியார்க்கு அருளிய அருளாடல்கள் பல. சுவாமிகள் கனவில் வந்து தீட்சை கொடுத்தோக வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்று நூலிற் கூறுகின்றார்." நான் சிறிது நேரம் தேவாரம் கேட்டுவிட்டு ஒரு அன்பர் வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினேன். விடியற்காலை 4 மணிக்கு நான் ஒரு வயல் வெளியில் சென்று கொண்டிருந்த பொழுது பாம்பன் சுவாமிகள் அங்கு வந்து எனக்கு சடக்கர மந்திரம் கனவில் உபதேசித்த காரணத்தினால் சென்னையில் என் இல்லத்தில் பூஜை அறையில் நடுவில் முருகன் திருவுருவமும் ஒரு புறம் அருணகிரிநாதர் திருவுருவமும் மற்றொரு புறம் பாம்பன் சுவாமிகளின் திருவுருவமும் வைத்து இன்றும் வழிபடுகின்றேன் வழிபாட்டின் போது பாம்பன் சுவாமிகளின் திருவருளை நினைந்து கண்ணீர் வடிப்பேன். வாரியார் வாழ்க்கை வரலாறு(பக்கம்-19).
இல்லறமும் நன் மக்கட்பேறும்
இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது இவர் உள்ளம் துறவறத்தையே விரும்பிய போதிலும் சேதுமாதவரின் கட்டளைப்படி இவர் திருமணம் ஏற்றார். மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய திருநிறைச் செல்வி காளிமுத்தம்மாளை வெகுதான்ய ஆண்டு வைகாசித்திங்கள்(கி.பி.1878) மங்கல ஓரையில் இராமநாதபுரத்தில் மணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகளுக்குப்பின் முருகையபிள்ளையும் சிவஞானாம்பாளும் பின் குமரகுருதாச பிள்ளையும் பிறந்தனர். சுவாமிகள் தன் ஞானவாக்கியத்தில் "சேய்பெண்டு சுற்றம் மாய்கின்ற மட்டும்" என்றும் "ஞண்டுச் சூல் போல் ஒண்டொடி விழைவு" என்றும் உரைத்துள்ளமையால் அவர் உள்ளம் எஞ்ஞான்றும் துறவறத்தையே விரும்பியது என்பதை நாம் அறியலாம்.
|