Swamigal Varalaru Swamigal Aruliyavai Iniyavazhvirkku Vazhi Contact Us
 
 
  சந்தமுனிக்குக் குருபூசை கண்டார்
 

சுவாமிகள் "அருணகிரிநாதர்" பால் அளவற்ற காதல் கொண்டு அவரையே தம் வழிபடு குருவாக எண்ணித் தம் பாடல் ஈற்றில் எல்லாம் அருணகிரிநாதரை "மண்ணும் வானமும் மெச்சப் பாடினோன்" என்றும் "ஓசைமுனி" என்றும் "சந்தமுனி" என்றும் "தீஞ்சொல் அருணகிரி", "தௌ்ளறிஞர்" என்றும் ஏற்றியுரைத்து மகிழ்ந்ததோடு தமது ஏக தெய்வ வழிபாட்டுக்கு முன்னோடியாகவும் அருணை முனிவரையே கொண்டார். மேலும் சுவாமிகள் இளமையிற் கூடாவொழுக்கம் பூண்டொழுகினார் என்பதையும் மறுத்து முன்வினையால் அவர் தொழுநோய் பெற்றாரென்றும், அவர் சிற்றின்பத்தை மிகுதியாகத் திருப்புகழில் பாடியிருப்பது வண்ணப்பாவின் இலக்கண மரபு என்றும் சென்னையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்கள். அஃது அன்பர்களால் குறிப்பெடுக்கப்பட்டு சிறுநூலாகவும் "ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம்" என வெளியிடப்பட்டது. தம் கனவில் இறைவன் அறிவுறுத்தியபடி அருணகிரிநாதர் குரு பூசையை உத்தராயணத்து ஆறாவது பௌர்ணமிதோறும் நடாத்தச் சுவாமிகள் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். சுவாமிகள் திருஅல்லிக்கேணி திருவட்டீசுவரன் ஆலயத்திற்குத் தம் செலவில் அருணகிரிநாதர் உற்சவர் விக்ரகமும் தந்து அருளியுள்ளமையால் அருணகிரிநாதர் பால் சுவாமிகள் கொண்ட பக்தி அளவிடற்கரியது.

Audio - Click to ON / OFF :