கஷ்டங்களை தீர்க்கும் கந்தசுவாமி

செய்யூர் தல வரலாறு:
செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவாகும். இந்த தாலுக்காவின் தலைமையகமாக செய்யூர் நகரம் விளங்குகிறது. பண்டை நாளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழ நல்லூர் என்றும், வீரராஜேந்திரநல்லூர் என்றும் பெயர் பெற்றிருந்தது என்றும், இது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செம்பூர் கோட்டத்து புறையூர் நாட்டை சேர்ந்திருந்தது என்றும் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.
மேலும் இவ்வூருக்கு சேயூர், செய்கையம்பதி, வளவாபுரி என்ற பெயர்களும் இருந்துள்ளன. செய்யூரை மதுராந்தகம் வழியாக வும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் அடையலாம். இவ்வூர், மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இவ்வூரை அடைய அருகிலிருக்கும் விமான நிலையம் சென்னை அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கல்பட்டு, மதுராந்தகத்திலிருந் தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் மூலமாகவும் நாம் செய்யூரை அடையலாம்.
ஆலய அமைப்பு:
இத்திருக்கோயில் தெற்கு நோக்கி அமைந் துள்ளது. வாயிலில் கோபுரம் எதுவுமில்லை. மூலஸ்தானம் கிழக்கு நோக்கி உல்ளது. கர்ப்ப கிரகத்தில் அருள்மிகு கந்தஸ்வாமி, வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இருபுறமும் சுவீரன், சுஜனன் ஆகிய துவாரபாலகர்களுடன் சுப்ரமணியர் காட்சி தரும் அழகு பரவசத்தை ஏற்படுத்துகிறது.
கோயிலின் பிரதான வாயிலில் நுழைந்ததும் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் இருந்து முன் மண்டபத்தில் நுழைந்ததும், இடப்புறத்தில் ஸ்ரீ சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும் அதன் அருகில் பள்ளியறையும் இருப்பதைக் காணலாம். இச்சன்னதியின் முன் நந்தி தேவரும், இருபுறம் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர்.
இக்கோவிலுக்கு இரண்டு நுழைவு வாயில்கள். தெற்கு வாயில் மூலமாக உட்பிரகாரத்தை அடைந்து முருகனை தரிசிக்கலாம். வெளிப் பிரகாரத்தின் கிழக்கு முன்புறத்தில் ப்ராசீன கல் தீபஸ்தம்பமும், கொடிமரமும் மூலஸ்தானத்தை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றன. கிழக்கு வாயில் மூலமும் நாம் உட்பிரகாரத்தையும், தீபாராதனை மண்டபத்தையும் அடையலாம்.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்களாக காட்சியளிப்பதாகும். வழக்கமாக சைவத் தலங்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர் துர்க்கை மற்றும் பைரவர் கோஷ்ட தெய்வங்களாக விளங்குவர். ஆனால், இக்கோவிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்திக்கு பதிலாக பிரம்மசாஸ்தாவும், விஷ்ணுவுக்கு பதிலாக பாலஸ்கந்தரும், ப்ரம்மாவுக்கு பதிலாக சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புளிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். மேலும் சிவத்தலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் ஆலயத்தில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியன் குஹசூரியன் என்று அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய கோபுரவாசல் வழியாக தீபா ராதனை மண்டபத்திற்குள் பிரவேசிப் போருக்கு தரிசனம் தர ஆறுமுக சுவாமியும் அமர்ந்துள்ளார்.
வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப் படுகின்றன. இந்த கோவிலின் தலவிருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்களாகும்.
கொடி மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதி யும், அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளது. 1947-ஆம் ஆண்டுவரை இம்மண்டபத்தில் திருவிழாக் களின்போது சகலவிதமான வாத்திய கருவிகளும் இசைக்கப் பட்டதுடன் நடன நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. துவஜஸ்தம்பத்திற்கு பின்னால் நவக்கிரகங் களுக்கு தனி சன்னதி உள்ளது.
இக்கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள நட்சத்திர வேதாளங் களாகும். சாதாரணமாக நாம் வேதாளங் களைப் பற்றி விக்கிரமாதித்தன் கதையில் படித்திருப்போம். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும்போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு இன்றியமையாத தனிச்சிறப்பாகும்.
இவ்வேதாளங்கள் பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. எனவேதான், இக்கோவிலில் வேதாளங்கள் மட்டுமின்றி பைரவரும் காணப் படுகின்றார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியி லும் அவரவர் நட்சத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு தம் கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள் பைரவர் மூலமாக முருகனிடம் கொண்டு போய் சேர்த்து, அவை நிறைவேற்றப் படுவதாக ஐதீகம். இப்பூஜை மூலம் பயனடைந்தோர் அநேகர். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பல மக்கள் இக்கோவிலை நாடி வருவதே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.
தேய்பிறை அஷ்டமி அன்று மாலை ‘வேதாள பூஜை’ விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கு செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.
ஆதாளியை ஒன்(று) அறியேனை, அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ!
கூதாள கிராத குலிக்(கு) இறைவா
வேதாள கணம் புகழ்வேலவனே!
-கந்தர் அனுபூதி
27 நட்சத்திர பூத வேதாளங்களின் பட்டியல்:
1. நாகாயுதபாணி பூத வேதாளம்    –    அஸ்வினி
2. வஜ்ரதாரி பூத வேதாளம்    –    பரணி
3. வைராக்கிய பூத வேதாளம்    –    கிருத்திகை
4. கட்கதாரி பூத வேதாளம்    –    ரோகிணி
5. ஞானபூத வேதாளம்    –    மிருகசீரிஷம்
6. தோமரபூத வேதாளம்    –    திருவாதிரை
7. வக்ரதந்த பூத வேதாளம்    –    புனர்பூசம்
8. விசாள நேத்ர பூத வேதாளம்    –    பூசம்
9. ஆனந்தபைரவபக்த பூத வேதாளம்    –    ஆயில்யம்
10. ஞான ஸ்கந்த பக்த பூத வேதாளம் –    மகம்
11. தர்பகர பூத வேதாளம்    –    பூரம்
12. வீரபாகு சேவக பூத வேதாளம்    –    உத்திரம்
13. சூரபத்ம துவம்ச பூத வேதாளம்    –    ஹஸ்தம்
14. தாரகாசுர இம்ச பூத வேதாளம்    –    சித்திரை
15. ஆனந்த குக பக்த பூத வேதாளம்    –    சுவாதி
16. சூர நிபுண பூத வேதாளம்    –    விசாகம்
17. சண்டகோப பூத வேதாளம்    –    அனுஷம்
18. சிங்க முகாசுர இம்ச பூத வேதாளம்    –    கேட்டை
19. பராக்ரம பூத வேதாளம்    –    மூலம்
20. மஹோதர பூத வேதாளம்    –    பூராடம்
21. ஊர்த்துவ சிகாபந்த பூத வேதாளம்    –    உத்திராடம்
22. கதாபரணி பூத வேதாளம்    –    திருவோணம்
23. சக்ரபாணி பூத வேதாளம்    –    அவிட்டம்
24. பேருண்ட பூத வேதாளம்    –    சதயம்
25. கோரரூப பூத வேதாளம்    –    பூரட்டாதி
26. குரு பைரவ சேவக பூத வேதாளம்    –    உத்திரட்டாதி
27. குரோதன பேரவ பக்த பூத வேதாளம்    –    ரேவதி
மேலும் இக்கோவிலில் பெரியாண்டவர் பூஜையும் அனுஷ்டிக்கப் படுகிறது. கோவிலுக்கு வெளியே நவசந்தியில் நவக்கிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். இதுவும் இக்கோவிலின் ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் ஒரு திருப்பெயர். இக்குளம் ஆலயத்திற்கு சொந்தமானது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ கந்தஸ்வாமி ஆலயத் தில் ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி சூரசம் ஹாரம், கார்த்திகை தீபம், தைபூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் ஆகியவை ஏராளமான ஜனத் திரளுக்கு நடுவே கொண்டாடப்படுகின்றன.
ஷஷ்டியில் 3-ம் நாள் வேல் வழங்கும் விழா, பூராட நட்சத்திரத்திற்கு உரிய மஹோதர வேதாளத்திற்கு பின்புறம் கொண்டாடப்படு கிறது.
தல சம்பந்தமான நூல்கள்:
செய்யூர் கந்தஸ்வாமி பெருமானைப் பாடி அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம், சேறை கவிராஜ பிள்ளையின் சேயூர் முருகன் உரை, ஸ்ரீ முருகதாச ஸ்வாமிகளின் சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது ஆகிய நூல்கள் தோன்றியுள்ளன.
மிக முக்கியமாக இத்தலம் அருணகிரிநாத ரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரு தலமாகும். இத்தல முருகனை புகழ்ந்து பாடிய அருணகிரி நாதருக்கு தீபாராதனை மண்டபத்தில் சிலையும் அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுகிறது.
அருணகிரிநாதர் பாடிய சேயூர் முருகன் திருப்புகழ்
முகிலாமெனும் வார்குழலார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை           புரிமாதர்

முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய           மயில்போல்வரர்

அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட              நடைமேவி

அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழலாவிடு பாவையர்
அவர் பாயலிலேயடியேனுட             லழிவேனோ:

ககனார் பதியோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட              விடும் வேலா

கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை            யருள் பாலா:

மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி          மணவாளா

மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள் படவே அயிலேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன           பெருமானே!
செய்யூர் மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் நிறுத்தத்தி லிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7மணி முதல் 11 மணி வரை
காலை பூஜை 9 மணிக்கு நடைபெறும்.
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை.
தொடர்பிற்கு:
திரு.சந்திரசேகர குருக்கள்:
9444729512

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt